பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற பகுதிகளில் மாடுகளை வெட்ட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகைக்காக துடியலூர் சந்தை, ரத்தினபுரி மசூதி, உக்கடம், செல்வபுரம், கள்ளமேடு, குனியமுத்தூர், கோட்டைமேடு, போதனூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக பொது இடங்களில் மாடுகள் வெட்டப்பட உள்ளதாக இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளரான, கோவை மாவட்டம் செல்வபுரத்தைச் சேர்ந்த சூர்யபிரசாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மாடுகளை மீட்டு கோ சாலைகளுக்கு அனுப்பி வைக்கும்படி செல்வபுரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கூறியிருந்தார். புகாரை பரிசீலித்து பொது இடங்களில் மாடுகள் வெட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்ககும்படி உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அமர்வு, அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர பிற பகுதிகளில் மாடுகளை வெட்டக் கூடாது என உத்தரவிட்டது. மேலும், பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படவில்லை என்பதை தமிழக அரசின் தலைமை செயலாளரும், டிஜிபி-யும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
















