மேகதாது அணை திட்டத்துக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டவும், விவசாயிகள் நலனை காத்திடவும் முதலமைச்சர் விஜய் கடந்த 25ஆம் தேதி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தீர்ப்பு விவரங்களை கருத்தில் கொண்டு உடனடியாக தொடர் சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், டெல்லிக்கு சென்ற முதலமைச்சர், மேகதாது விவகாரத்தில் உள்ள சட்ட வாய்ப்புகள் குறித்து மூத்த வழக்கறிஞர்களுடன் தமிழ்நாடு இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, மேகதாது அணை திட்டத்துக்கு தடைகோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்ய இறுதி ஒப்புதல் அளித்தார்.
இதனை தொடர்ந்து, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட திட்டமிட்டிருப்பதை சட்டவிரோதம் என்று அறிவித்து திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணைக்கான பூமி பூஜை உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் விதிகளை மீறும் மேகதாது அணை திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சூழல் அனுமதி தரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















