தென்காசி மாவட்டம், நெட்டூரில் சாலையில் நடந்து சென்ற 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் திருமண நிகழ்வுக்காக வந்த சிலர் சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது முகத்தில் முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், சாலையில் நடந்து சென்றவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.
இத்தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற ஆலங்குளம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்விரோதம் காரணமாக அரிவாள் வெட்டு சம்பவம் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















