வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி பெரு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக திருநாளான இன்று, நள்ளிரவு ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
இதனிடையே வைகாசி விசாக திருநாளை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் பலர் விரதமிருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதேபோன்று வைகாசி விசாக விழாவை ஒட்டி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் விரதமிருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுவாமிமலை முருகன் கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு மூலவருக்கு இளநீர், தயிர், பால், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
















