மகாராஷ்டிரா அரசால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி, தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிரா மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு வரலாற்று சிறப்புமிக்கது என தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மீது அக்கறை இருப்பதால்தான் மகாராஷ்டிர அரசு அனைத்து விதிகளையும் பின்பற்றி வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர அரசு 36 ஆயிரத்து 585 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள நிலையில், தமிழக அரசு 2 ஆயிரத்து 44 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்துள்ளது.
இரு மாநிலங்களின் கடன் தள்ளுபடிக்கு இடையிலான வேறுபாடு மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசமாக உள்ளது எனவும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார். பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய விதிகள் தடையில்லை என்றும், மனம் இருந்தால் மட்டுமே போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழக ஆட்சியாளர்கள் நபார்டு வங்கி மீது பழி போடுவதற்கு பதிலாக விதிகளை பின்பற்றி விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
















