பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், மாணவர்களின் கலாச்சார உரிமைகளையும் அவர்களின் வழிபாட்டு சுதந்திரத்தையும் நசுக்க நினைக்கும் தவெக அரசு! கல்வி வளாகங்களுக்குள் மதம் சார்ந்த அடையாளங்களோடு யாரும் வரக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருப்பது, தமிழகத்தின் பாரம்பரியக் கலாச்சாரத்தின் மீதும், பண்பாட்டு விழுமியங்கள் மீதும் தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதல் என தெரிவித்துளள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் (பிரிவு 25) ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள வழிபாட்டுச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்தை முற்றிலும் பறிக்கும் இத்தகைய அறிவிப்பை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, மாணவர்களின் சுய அடையாளங்களை அழிக்கும் கூடாரமாக மாறக்கூடாது. ஆனால், தனது அதிகார மமதையை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ள தவெக அரசு, முற்போக்கு என்ற போர்வையில் காலாவதியான நாத்திகக் கொள்கைகளை இறக்குமதி செய்து, தமிழக மக்களின் ஆன்மிக வாழ்வியலோடு விளையாட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
எனவே, மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் இந்த அறிவிப்பைத் தவெக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், தமிழக மக்கள் தங்களது கலாசாரத்தைக் காக்க ஜனநாயக ரீதியில் திரண்டெழுவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
















