திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணிநேரம் வரை காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.
கோடை விடுமுறை முடிவடைந்த போதிலும், திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டோக்கன் இல்லாமல் திருமலைக்கு வரும் பக்தர்கள், இலவச தரிசனத்திற்காக சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று 24 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 முதல் 5 மணி நேரமும், இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 முதல் 8 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 74 ஆயிரத்து 634 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். மேலும் உண்டியல் காணிக்கையாக 4 கோடியே 64 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
















