மானாமதுரை ஆகாஷின் உடல் 101 நாட்களுக்கு பின்பு பெற்றோர் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான ஆகாஷ் என்பவர் இருவரை அரிவாளால் தாக்கிய வழக்கில் கடந்த மார்ச் 6ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது தப்ப முயன்று காலில் முறிவு ஏற்பட்ட ஆகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மார்ச் 8ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆகாஷின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 28 இடங்களில் காயங்கள் இருந்ததாக குறிப்பிட்டிருந்த நிலையில், ஆகாஷ் மரணத்திற்கு காரணமான காவலர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆகாஷ் மரணத்திற்கு இழப்பீடு கோரி தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஜூன் 15ஆம் தேதிக்குள் உடலை பெற்று கொள்ளாவிட்டால், போலீசாரே உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி, ஆகாஷின் உடலை காவல்துறையினர் எடுத்து செல்ல வந்தபோது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர். பின்னர், ஆகாஷின் உடல் தத்தனேரி மின் மயானத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
















