தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருப்பதாகவும், 1970 ஆம் ஆண்டு, இதே நாளில், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் கூறியுள்ளார்.
56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிப்பதகாவும், கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்ததாகவும், ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது எனவும் விமர்சித்துள்ளார்.
தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
















