ஜி7 மாநாட்டின்போது தன்னுடன் புகைப்படம் எடுப்பதற்கு கெஞ்சியதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின்போது இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தனது பிரபலத்தை அதிகரிப்பதற்காகத் தன்னுடன் புகைப்படம் எடுக்க கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்ரூத் சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மெலோனி மறுத்ததே இத்தாலியில் அவரது செல்வாக்கு சரிவதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், டிரம்பின் கருத்துக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தூண்டுதல் இல்லாமல் அதிபர் டிரம்ப் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்கள் அர்த்தமற்றவை என்றும், டிரம்புடன் நண்பராக இருந்ததால் தனது செல்வாக்கு உயரவில்லை எனவும் கூறியுள்ளார்.
தனது செல்வாக்கு என்பது இத்தாலியின் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் திறனைப் பொறுத்தது எனக்கூறியுள்ள மெலோனி, இத்தாலியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் விஷயத்தில் இதே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தாம் பிரதமராக இருக்கும் வரை அமெரிக்க ராணுவ தளங்கள் ஒப்பந்தங்களை மீறமுடியாது என மெலோனி குறிப்பிட்டுள்ளார்.
















