கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா தின விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், யோகாவை ஒரு நாளுக்கான நிகழ்வாக மட்டுமல்லாமல், வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், யோகா உடல் நலம், மனநலம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் சிறந்த பயிற்சி முறை எனவும் கூறினார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற யோகா தின விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 5 வயது முதல் 80 வயது வரையிலானோர் பங்கேற்று சர்வாங்காசனம், சிரசாசனம், புஜங்காசனம், தனுராசனம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தனர்.
சேலத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர்.
சேலம் மரவனேரி மாதவம் வளாகத்தில் மாத்ரூ சக்தி யோகா மற்றும் சேவா சபதி சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, குப்புமணி தேசிகாச்சாரி தலைமை தாங்கினார்.
இந்த விழாவிற்கு தேசிய சேவா சமிதி சேலம் தலைவர் ஹரிஹர கோபால் முன்னிலை வகித்த நிலையில், ஆர்எஸ்எஸ் ஊடகத்துறை மாநில இணைச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் சேலம் மாநகரசை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் NCC மாணவர்கள் சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று, யோகாசனங்களை செய்தனர்.
திருவாரூரில் பதஞ்சலி யோகா பேரவை சார்பில் சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்தனர். முன்னதாக யோகாவின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதேபோன்று மயிலாடுதுறையில், ஸ்ரீ பதஞ்சலி யோகா மையம் சார்பில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இதில் 5 வயது முதல் 80 வயது வரையிலான 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, சர்வாங்காசனம், புஜங்காசனம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டனர்.
















