திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்தது. இந்த வாயு கசிவால் 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கம் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமோனியா வாயு கசிந்ததால் 2 பேர் உயிரிழந்தனர்.
குளிர்பதன அமைப்பில் பயன்படுத்தப்பட்ட அமோனியா வாயு கசிந்ததே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆலையின் நிர்வாகி டேனியல் என்பவரை கைது செய்தனர். ஆலையின் மேற்பார்வையாளர் மற்றும் ஆலையின் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்டோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
















