பெண்கள் பாதுகாப்பில் சமரசம் இல்லை என்றும், பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், மாவட்ட ஆட்சியர்கள் மாதந்தோறும் சட்டம்-ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் எனவும், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும், அரசு நலத் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், இதில் சமரசம் இல்லை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து, தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்படலாம் என்றும், தனிநபர்களின் தலையீடு இருக்காது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் கல்வித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், கோயில் திருவிழாக்கள், அரசியல் பேரணிகள் மற்றும் பொது நிகழ்வுகளின்போது நெரிசல் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
காவிரி, வைகை மற்றும் பிற ஆற்று மணல் படுகைகளில் சட்டவிரோத மணல் குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
ரசாயன மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளில், தொழில்துறை பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
















