நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில், போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் பயிற்சி வழங்கப்படும் என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப் பார்க்கும் வகையில் இந்தியா மாறி வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
அனைத்து துறைகளிலும் தற்சார்பு அடைய வேண்டி உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இப்போது அனைத்து துறைகளிலும் முன்னேறி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும், வளர்ச்சியை நோக்கி 140 கோடி மக்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் உறுதி அளித்தார்.
நவீன இந்தியாவுக்கு செமிகண்டக்டர்கள் மிக முக்கியமானவை என்ற பிரதமர் மோடி, தற்போது 3 செமிகண்டக்டர் ஆலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 முதல் 8 ஆலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
தனியார் பயிற்சி மையங்களால் நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களுக்கு பெரும் பொருளாதார சுமை ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர்,
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவசமாக ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட உள்ளது என்று அறிவித்தார்.
இதன் மூலம் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி மையங்களுக்காக செலவிடும் பல ஆயிரம் கோடி ரூபாயை ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் சேமிக்க முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
















