வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மிகுந்த தேசப்பற்றின் காரணமாக ராணுவப்பேட்டை என அழைக்கப்படுகிறது. இதன் பின்னணியை விளக்கும் செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்…
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே ராணுவப்பேட்டை என்கிற கம்மவான்பேட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சுமார் 4 ஆயிரம் குடும்பங்களும் மிகுதியான தேசப்பற்றை கொண்டுள்ளன.
1806-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சியின் மூலம் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் மாவட்டத்தில் உள்ள இந்தக் கிராமம், அதீத தேசப்பற்றை கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதற்கு சாட்சியாக இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு நான்கு தலைமுறையாக வீரர்களை அனுப்பி வருகிறது கம்மாவான்பேட்டை.
1971-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றிப் பெற்ற நிலையில், 1972-ஆம் ஆண்டு கம்மவான்பேட்டை பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்பதற்காக அப்போதைய தமிழக ஆளுநர் கே.கே.ஷா வருகை தந்திருந்தார். அப்போது, கம்மவான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், சீருடையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, மிகவும் சிறிய கிராமத்தில் இவ்வளவு ராணுவ வீரர்களா என்று திகைத்துப்போனார் ஆளுநர். கம்மவான்பேட்டை கிராமத்தை இனிமேல் ராணுவப்பேட்டை என்று தான் அழைக்கவேண்டும் என மகிழ்ச்சியுடன் பாராட்டினார். அதைத்தொடர்ந்து கம்மவான்பேட்டை கிராமத்திற்கு ராணுவப்பேட்டை என்ற புனைப்பெயரை பொதுமக்கள் சூட்டினர். அரசு ஆவணங்களில் கம்மவான்பேட்டை என இருந்தாலும், பொதுமக்கள் பேச்சுவழக்கில் ராணுவப்பேட்டை என்றே அழைத்து வருகின்றனர்.
சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து சிப்பாய்கள் முதல் அதிகாரிகள் வரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் நாட்டின் முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வுப் பெற்றுள்ளனர். ராணுவப்பேட்டையில் இருந்து இந்திய ராணுவத்திற்கு சுமார் 3 ஆயிரம் வீரர்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தாத்தா, தந்தை, மகன், பேரன் என ஏற்கனவே நான்கு தலைமுறையினர் ராணுவத்திற்கு சென்றாலும், காலம் மாறினாலும் ராணுவப்பேட்டையின் தேசப்பற்று இன்றளவும் குறையவில்லை. ஐந்தாம், ஆறாம் தலைமுறை இளைஞர்களும் ராணுவத்திற்குதான் செல்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குறைந்தபட்சம் ஒருவராவது ராணுவத்தில் இருக்க வேண்டும் என்ற உத்வேகம் இளைஞர்களிடம் காணப்படுகிறது. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற வீரர்கள், தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை ராணுவத்தில் சேருவதற்கான பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
ராணுவப்பேட்டையைச் சேர்ந்த இளம் தலைமுறையினரும் நாள்தோறும் அர்ப்பணிப்புடன் இராணுவப் பயிற்சிக்காக சில மணி நேரம் செலவிட்டு வருகின்றனர்.
நாட்டிற்காக எல்லையில் காவல்காக்கும் ராணுவவீரர்களை உருவாக்குவதை கடந்து, தேசிய விழாக்களையும் சுதந்திர தினத்தையும் மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடி தேசப்பற்றை வெளிப்படுத்துவதிலும் ராணுவப்பேட்டை மக்கள் முன்னணியில்தான் உள்ளனர்.
தமிழ்ஜனம் செய்திகளுக்காக வேலூரில் இருந்து செய்தியாளர் சசிகுமார்
















