இந்திய விடுதலைக்கு வித்திட்ட முக்கிய போராட்டங்கள் என்றால் அவை உப்பு சத்யாகிரகமும், வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள் தாம். இதில் பங்கேற்ற முக்கியமான சுதந்திர போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி பற்றிய நினைவலைகளை பார்ப்போம்.
பிரிட்டிஷ் அரசின் உப்பு வரி மற்றும் ஏகபோக உரிமையை எதிர்த்து, 1930ம் ஆண்டு மார்ச் 12-ல் மகாத்மா காந்தி குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கி தண்டி வரை 241 மைல்கள் நடைப்பயணம் மேற்கொண்டு உப்புச் சட்டத்தை மீறும் போராட்டத்தை முன்னெடுத்தார்.
முன்னதாக தமிழகத்தில் 1892ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஒரு நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்த ருக்மிணி லட்சுமிபதியின் தாத்தா ராஜா டி. ராம்ராவ் பெரிய செல்வாக்கு மிக்கவராக இருந்தார். சென்னை பெண்கள் கிருத்துவக் கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்ற ருக்மணி, 1923ல் காங்கிரசில் சேர்ந்தார். பிறகு 1926ல் பாரிசில் நடந்த சர்வதேச பெண்கள் வாக்குரிமை கூட்டணி பேராயத்தில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.
1930ல் வேதாரண்யத்தில் மூதறிஞர் ராஜாஜி தலைமையிலான நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டார். இதன் மூலம் உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் சிறை சென்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.
1934ல் சென்னை மாகாண சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ருக்மணி 1937லும் வெற்றி பெற்று சட்டமன்றத்தின் துணைச் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1946 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி முதல் 1947ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி வரை சென்னை மாகாணத்தில் அப்போதைய முதலமைச்சர் பிரகாசத்தின் அமைச்சரவையில் பொதுச்சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அதன் மூலம் சென்னை மாகாணத்தில் அமைச்சர் பதவி வகித்த முதல் மற்றும் ஒரே பெண் அமைச்சர் என்ற சாதனையையும் செய்தார்.
சென்னை எழும்பூரிலுள்ள மார்ஷல் சாலைக்கு ”ருக்மிணி லட்சுமிபதி சாலை” என்று பெயர் சூட்டியும் 1997ல் நினைவு அஞ்சல் தலை வெளியிட்டும் அரசு ருக்மணி லட்சுமிபதியைக் கவுரவப் பட்டுள்ளார்.
உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று சிறைசென்ற முதல் பெண் அரசியல் கைதியாகவும், சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சராகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைப் படைத்த சுதந்திர போராட்டத் தியாகியான ருக்மணி லட்சுமிபதி இந்த 80வது சுதந்திர நாளில் போற்றி மகிழ்வோம்.
















