இந்திய விடுதலைக்குத் தமிழகம் ஆற்றிய பங்கு அளப்பரியது. குறிப்பாக மதுரையில் குடும்பம் குடும்பமாகச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட வரலாறுகள் நிறைய நிறைய உள்ளன. மதுரை வைத்தியநாத அய்யர் குடும்பம், என்.எம்.ஆர்.சுப்பராமன் குடும்பம் என்ற வரிசையில் இப்படி அந்த வரிசையில் ஸ்ரீநிவாச ஆழ்வார்- பங்கஜத்தம்மாள் தம்பதியினருக்கு முக்கிய இடமுண்டு. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மதுரையில் திருமலை ஆழ்வார் என்பவரின் மகன் ஸ்ரீநிவாச ஆழ்வார். இவருக்கு இசை நன்றாக வரும். அதோடு பாடல்களை இயற்றிப் பாடும் திறமையும் இருந்தது. சிறுவயது முதல் தானே பாடல்களை இயற்றி இசையமைத்து பாடிவந்தார். தேசப் பற்று மிக்க ஸ்ரீநிவாச ஆழ்வார் எழுதும் பாடல் எல்லாம் தேசியப் பாடல்களாகவே அமைந்தன.
1919-ல் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலை இவரை வெகுவாக பாதித்தது. பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் டயர் நடத்திய இந்தக் கொடூரமான ஆதிக்க செயலால் நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலியானார்கள்.
இந்த படுகொலை நிகழ்ச்சியை ஸ்ரீநிவாச ஆழ்வார் கவிதைவடிவில் எழுதி, சோகமும் வீரமும் இழைந்தோடும் படியாகப் பாடி மக்கள் மத்தியில் மத்தியில் விடுதலை உணர்வைத் தூண்டினார். கணவருடன் சேர்ந்து தேசப் பற்றுப் பாடல்களைப் பாடி பங்கஜத்தம்மாவும் தேசிய உணர்வை ஏற்படுத்தினார்.
1930-ல் தமிழ்நாட்டில் திருச்சி முதல் வேதாரண்யம் வரையில் மூதறிஞர் ராஜாஜி மேற்கொண்ட உப்பு எடுக்கும் சத்தியாக்கிரக பாத யாத்திரைக்குச் சென்ற தொண்டர்களில் ஸ்ரீநிவாச ஆழ்வாரும் ஒருவர்.
தேச விடுதலைக்காக அந்த யாத்திரை வழியில் நடந்த சிரமங்களையெல்லாம் நாட்டுக்காகப் பொறுத்துக் கொண்டு கைதாகி ஓராண்டு திருச்சி சிறையில் அடைப்பட்டு கிடந்தார்.
தேசபக்தர் சுப்பிரமணிய சிவா சேலம் பாப்பாரப்பட்டியில் தொடங்கவிருந்த பாரதாஸ்ரமத்தில் சிவாவின் தொண்டராகச் சேர்ந்து பணிபுரிந்து வந்த ஸ்ரீநிவாச ஆழ்வார் சுதந்திர உதயத்தைக் காணாமலே 1937-ல் மரணமடைந்தார்.
7 வயதில் ஸ்ரீநிவாச ஆழ்வாரைத் திருமணம் செய்த பங்கஜத்தம்மாளும் தேசியப் பாடல்களை பஜனையாகப் பாடிக்கொண்டு தெருத்தெருவாக சென்று தேச விடுதலைக்குப் பாடு பட்டுள்ளார்.
மதுரையில் செல்லுமிடங்களிலெல்லாம் இந்த தேசிய பஜனைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் ஆதரவும் இருந்தது.
தேசப் பஜனை பாடுவது மட்டுமல்லாமல் மேடைகளில் ஏறி சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசி வந்த பங்கஜத்தம்மாள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான காங்கிரசின் அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் சுதந்திரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதன் காரணமாக பலமுறை கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக . இரண்டரை ஆண்டுகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளார்.
கணவரும் இறந்த பின்னும் விடுதலைக்குப் பாடுபட்ட பங்கஜத்தம்மாள் இந்திய சுதந்திரத்துக்குப் பின் காங்கிரசின் போக்குப் பிடிக்காமல் சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்.
சுதந்திரத்துக்குப் பின்னும் நாட்டு மக்கள் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், மேலாதிக்கச் சுரண்டல் போன்ற கொடுமைகளை அனுபவிப்பது கண்டு சோஷலிச இயக்கத்தில் சேர்ந்து சுதந்திர இந்தியாவிலும் காங்கிரஸ் அரசை எதிர்த்துப் போராடினார்.
சுதந்திரப் போர் காலத்தில் கள்ளுக்கடை மறியலிலும், சுதேசிப் பொருட்களை வாங்கு என்று போராடியும் சிறை சென்ற அம்மையார், பதுக்கலை எதிர்த்தும், ஊழலை எதிர்த்தும் போராட்டத்தைத் தொடர்ந்து போராடினார். உண்மையிலேயே பிறவி போராளியான இந்த அம்மையார் 1979 ஜூலை 1ஆம் தேதி இந்த உலக வாழ்வை முடித்துக் கொண்டார்.
















