2047-ம் ஆண்டு நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை எட்டும் காலத்திற்குள், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கில் நாம் முன்னேறி வருவதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்…
நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நமது மூவண்ணக்கொடி நமது சுதந்திரத்தின் அடையாளம் என்றும், அதை மிகுந்த பெருமிதத்துடன் ஏற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு அடைக்கலம் அளிக்கும் ஒரு நாட்டுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது தேசிய நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்க்கமான நடவடிக்கை என்று குறிப்பிட்டார்.
மேலும், பயங்கரவாதிகளும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் எங்கு பதுங்கியிருந்தாலும் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குடியரசுத் தலைவர் எச்சரிக்கை விடுத்தார். பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திற்கு இருப்பதை ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெளிப்படுத்தியதாகவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
இந்தியாவை மிகச்சிறந்த தேசமாக மாற்றும் உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்ததில் சர்தார் வல்லபாய் படேலின் பங்கு அளப்பரியது என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
















