போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்திவுள்ளார்.
டெல்லியில் ‘போதைப்பொருள் இல்லா இந்தியா’ என்ற விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி ‘விக்சித் பாரத் சங்கல்ப் அபியான்’ திட்டத்தின் ஒரு பகுதியான ‘போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்’ பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, போதைப்பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த நாடகத்தை இளைஞர்கள் நடித்து காட்டினர்.
பின்னர் காணொலி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இளைஞர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தகுதியுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் என்றும், இளைஞர்களின் கனவை போதைப்பழக்கம் தகர்க்கிறது எனவும் கூறினார். நாடு முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் 100 வாரங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக நாம் பார்க்கக்கூடாது எனக்கூறிய பிரதமர் மோடி, திருத்த வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், கடந்த ஆண்டு காசியில் தொடங்கிய விழிப்புணர்வு பிரச்சாரம், தற்போது நாடு தழுவிய இயக்கமாக வளர்ந்துள்ளது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
















