இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று எந்த ஹிந்து நினைத்தாலும், அவர் ஒரு ஹிந்து கிடையாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ‘யுனிவர்சல் ஒன் 2026’ விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியா பல்வேறு வேறுபாடுகளுக்கு இடையே ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் நாடாகத் திகழ்கிறது என கூறினார்.
நமது தற்போதைய அரசியல் சூழல் சுயநலம் சார்ந்ததாக மாறி வருகிறது எனக்கூறிய அவர், ஹிந்து மதம் மனித குல ஒற்றுமையை நம்புகிறது என தெரிவித்தார். இந்தியாவில் முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று எந்து ஹிந்து நினைத்தாலும் அவர் ஒரு ஹிந்து கிடையாது என குறிப்பிட்டார்.
மதச் சடங்குகளில் வேறுபாடுகள் இருந்தாலும், மனிதநேயம் ஒன்றே என்பதைத்தான் இந்தியக் கலாச்சாரம் நமக்குக் கற்பிக்கிறது என்றும், வெவ்வேறு மத நடைமுறைகள் இருந்தாலும் இறுதியில் ஒரே உண்மையையும் இறைத் தன்மையையுமே அடைகின்றன எனவும் தெரிவித்தார்.
மேலும், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இயற்கையின் உண்மையான தத்துவம் என்றும், பாரதம் வரலாற்று ரீதியாகவே அனைத்து மதத்தினருக்கும் புகலிடம் அளித்து ஒற்றுமையாக வாழும் பாரம்பரியத்தை கொண்டுள்ளது எனவும் மோகன் பாகவத் கூறினார்.
















