ராமநாதபுரத்தில், பொதுப்பாதை ஆக்கிரமிப்பைத் தட்டிக்கேட்ட பெண்ணை தவெக வழக்கறிஞர் தாக்கி விரட்டியடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் முருங்கைவாடி பகுதியில் 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொதுப்பாதை ஒன்றை பிரதான வழித்தடமாக பயன்படுத்தி வந்தனர். இதற்கு தவெக வழக்கறிஞர் விமல் எதிர்ப்பு தெரிவித்ததால், வழக்கு தொடரப்பட்டு, பொதுப்பாதை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், நீதிமன்ற உத்தரவை மதிக்காத விமல் தரப்பினர், பாதையில் தகர சீட்டுகளை வைத்து அடைத்து, நிரந்தர சுவர் எழுப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். இதை எதிர்த்து கேள்வி கேட்ட அப்பகுதி மக்கள், தடுப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஷோபனா என்பவரை கொடூரமாக தாக்கியதோடு, மிளகாய்ப்பொடி கரைசலை ஊற்றி துரத்தினர். அலறியடித்து துடித்த ஷோபனாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தவெக வழக்கறிஞர் விமல் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
















