தவெக ஆலோசனைக் கூட்டத்தை முன்னிட்டு, ஆதரவு கட்சிகளின் தலைவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர், சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து அழைப்பு விடுத்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், டாஸ்மாக் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக சண்முகத்துடன் ஆலோசித்ததாக தெரிவித்தார். குஜிலியம்பாறை நிகழ்வு அரசுக்கு தெரியாமல் நடைபெற்றதாகவும், அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை அமைச்சர்கள் குழுவினர் சந்தித்து, தவெக ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வீரபாண்டியன், தாங்கள் அமைச்சரவையிலும், கூட்டணியிலும் இடம்பெறாத நிலையில், வெளியில் இருந்து அரசை ஆதரிப்பதால் குரல் எழுப்பி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, அவரது இல்லத்தில் அமைச்சர்கள் குழுவினர் சந்தித்து, தவெக ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அப்போது பேசிய வைகோ, முதலமைச்சர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆதரவு கட்சிகளின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக கலந்துகொள்ளும் என்று தெரிவித்தார்.
















