கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடி ரூபாயாக அதிகரித்துள்ள நிலையில், 20 ஆயிரத்து 349 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு மாநில ஜிஎஸ்டி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம், மத்திய அரசின் வரி பகிர்வு உள்ளிட்டவை வாயிலாக வரி வருவாயும், சேவை கட்டணங்கள், அபராதம் போன்றவற்றின் வாயிலாக வரி அல்லாத வருவாயும் கிடைக்கின்றன.
பணியாளர்கள் ஊதியம், ஓய்வூதியம், இலவச திட்டங்கள், மானியம் உள்ளிட்டவை வாயிலாக செலவு ஏற்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், தமிழக அரசுக்கு வரிகள், வரி அல்லாத வருவாய், மத்திய அரசின் மானியம் வாயிலாக ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 791 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இதே காலக்கட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 கோடி ரூபாய் செலவினம் ஏற்பட்டதால், 20 ஆயிரத்து 349 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
செலவில் கடன்களுக்காக செலுத்தப்பட்ட வட்டியின் பங்கு, 25 ஆயிரத்து 991 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் அரசு வாங்கிய கடன் 30 ஆயிரத்து 21 கோடி ரூபாயாக உள்ளது.
















