நாடு முழுவதும் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் மோடி காணொலி வாயிலாக வழங்கினார்.
மத்திய அரசின் ரயில்வே, வருவாய், உள்துறை, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்றது. இந்த 20-வது வேலைவாய்ப்பு முகாமில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பணி நியமன ஆணைகளை விநியோகித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும், திறன் மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். ரோஸ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு முகாம் மூலம் இதுவரை 12 லட்சத்து 75 ஆயிரம் இளைஞர்கள் அரசு பணிக்கான நியமன ஆணைகளை பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
















