இந்தியாவின் அதிகரிக்கும் வருமானம் மற்றும் நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை மக்களின் நுகர்வு முறையை மாற்றியமைக்கும் என்று HSBC வங்கி கணித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2025-ல் சுமார் 4 டிரில்லியன் டாலராக இருக்கும் இந்தியாவின் பொருளாதாரம், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, 2031-க்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. தொடர்ந்து 2036-க்குள் சுமார் 10 டிரில்லியன் டாலராக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையான வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 6.5 சதவீதமாக இருந்தால், 2050-க்குள் சுமார் 30 டிரில்லியன் டாலரையும், 7.5 சதவீத வளர்ச்சியாக இருந்தால் சுமார் 35 டிரில்லியன் டாலரையும் இந்தியப் பொருளாதாரம் எட்டும் என்று HSBC வங்கி மதிப்பிட்டுள்ளது.
அதாவது ஆண்டுக்கு ஆண்டு இந்தியக் குடும்பங்கள் நடுத்தர வருமானப் பிரிவில் இருந்து அடுத்தடுத்த உயர் வருமானப் பிரிவுகளுக்கு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
தொடர்ந்து 6.5 சதவீத ஆண்டு வளர்ச்சியை இந்தியா தக்கவைத்தால், வரும் 2032-2033ம் நிதியாண்டிற்குள் குறைந்த-நடுத்தர வருமானமுள்ள நாடு என்ற நிலையிலிருந்து உயர்-நடுத்தர வருமானமுள்ள நாடாக மாறும் என்றும், 2046-2048 க்குள் அதிக வருவாய் கொண்ட நாடாக இந்தியா மாறவும் வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது.
கடந்த 2000 மற்றும் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. இது அடுத்த 25 ஆண்டுகளில் மேலும் 5 மடங்கு உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப் பட்டுள்ளது.
இதன் விளைவாக அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி, ஆடம்பர மற்றும் விருப்பத்தேர்வு சார்ந்த பொருட்களுக்கான செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
மக்களின் இந்த நுகர்வு முறை மாற்றம் என்பது இந்தியப் பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி (Mutual Funds) துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நுகர்வோர் சார்ந்த நிறுவனங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பிரீமியம் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பங்குகள் நீண்ட கால அடிப்படையில் பெரும் வளர்ச்சியைக் காணும் என்று கூறப்பட்டுள்ளது.
2023-ல் 30 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 13,300-ஆக இருந்த நிலையில் 2028-க்குள் அந்த எண்ணிக்கை சுமார் 20,000-ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் அடுத்த பத்தாண்டுகளில் சுமார் 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கைமாறக்கூடும் என்றும் இந்த வங்கியின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் அடுத்த தொழில்துறை வளர்ச்சி சுழற்சியை வடிவமைக்கக்கூடிய ஆறு முக்கிய துறைகளாக space, semiconductors, data centres, solar, electronics மற்றும் aerospace உள்ளது என Jefferies India Equity Strategy அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டுச் சுழற்சியின் பின்னணியில் தான் நுகர்வு முறை மாற்றம் ஏற்படுவதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
















