அமெரிக்க பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பழகிய சில காலம் சிறந்த காலம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தம்மிடம் கூறியதாக முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தெரிவித்துள்ளார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கை விசாரிக்கும் குடியரசுக் கட்சி தலைமையிலான விசாரணை குழுவில் நேரில் ஆஜராகி பில் கிளிண்டன் சாட்சியம் அளித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் குற்றவியல் ஆவணங்கள் அனைத்தையும் வெளியிடும் சட்ட மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த நவம்பரில் அங்கீகரித்தன.
எப்ஸ்டீன் மீதான குற்றவியல் விசாரணைகள் தொடர்பான அனைத்து கோப்புகளையும் கடந்த டிசம்பர் 19ஆம் தேதிக்குள் வெளியிடுமாறு நீதித்துறைக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இதனையடுத்து கடந்த ஜனவரி 30 ஆம் தேதி, அமெரிக்க நீதித்துறை முப்பது லட்சத்துக்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது.
இதில் முன்னாள் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ, பில் கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், தற்போதைய அதிபர் ட்ரம்ப் உட்பட உலகளவில் பல பிரபல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
2008 ஆம் ஆண்டு புளோரிடாவில் பாலியல் குற்றவாளியாக எப்ஸ்டீன் தண்டிக்கப்படுவதற்கு முன்பே அவருடனான உறவையும் முற்றிலுமாக முறித்துக் கொண்டதாக ட்ரம்பும், பில் கிளிண்டனும் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, 2019ம் ஆண்டு நியூயார்க் சிறைச்சாலையில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்ட எப்ஸ்டீனுடன் தொடர்புடையவர்களைக் குடியரசுக் கட்சி தலைமையிலான பிரதிநிதிகள் சபை மேற்பார்வைக் குழு விசாரித்து வருகிறது.
இந்தத் குழுவின் விசாரணையில் சாட்சியமளிக்குமாறு தங்களுக்கு வழங்கிய சம்மனை முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவி ஹில்லாரி கிளின்டன் நிராகரித்தனர். நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகவும் தங்களை அச்சுறுத்துவதாகவும் குடியரசுக் கட்சியினர் கூறியதைத் தொடர்ந்து இருவரும் சாட்சியமளிக்க ஒப்புக்கொண்டனர்.
வீடியோவில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தில், எப்ஸ்டீனை தெரியும் என்று ஒப்புக்கொண்ட பில் கிளிண்டன், அதேநேரம் எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று உறுதியாக மறுத்துள்ளார். மேலும் ட்ரம்ப் அதிபராவதற்கு முன் 2002 ஆம் ஆண்டில் ஒரு கோல்ஃப் போட்டிக்கு எப்ஸ்டீனை ட்ரம்ப் அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தாம் எப்ஸ்டீனின் விமானத்தில் பயணம் செய்தது ட்ரம்புக்குத் தெரியும் என்று கூறியுள்ள பில் கிளிண்டன், பல வருடங்களாக எப்ஸ்டீனுடன் செலவழித்த நாட்கள் நல்ல நாட்களாக இருந்தன என்றும், ஒரு ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் காரணமாக எப்ஸ்டீனுடன் உறவை முறித்து கொண்டதாகவும் ட்ரம்ப் தன்னிடம் கூறியதாக விவரித்துள்ளார்.
மேலும் தனது மார்-எ-லாகோ கடற்கரை கிளப்பில் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்துகொண்டதால் எப்ஸ்டீனை அங்கிருந்து வெளியேற்றிவிட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்ததாக பில் கிளிண்டன் கூறியுள்ளார்.
2000ம் ஆண்டுகளின் முற்பகுதியில் கிளிண்டன் அறக்கட்டளை தொடர்பான மனிதாபிமானப் பணிகளுக்காக எப்ஸ்டீனின் விமானத்தில் பலமுறை பறந்ததாக ஒப்புக் கொண்டுள்ள பில் கிளிண்டன், எப்ஸ்டீனின் தனியார் கரீபியன் தீவுக்கு தான் ஒருபோதும் சென்றதில்லை என்றும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இதனால் மட்டுமே எப்ஸ்டீனின் குற்றச் செயல்களில் ட்ரம்ப்பும் ஈடுபட்டதாக கூற முடியாது என்றும் பில் கிளிண்டன் சாட்சியம் அளித்துள்ளார்.
எப்ஸ்டீனை தொண்டு நிறுவன நன்கொடையாளராகவே, தனது முன்னாள் கருவூல செயலாளர் லாரி சம்மர்ஸ் அறிமுகப்படுத்தியதாக கூறியுள்ள கிளிண்டன், ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கும் , ஒரு முறை புளோரிடாவிலிருந்து நியூயார்க்குக்கும் எப்ஸ்டீனின் ஜெட் விமானத்தில் பயணித்ததாகவும் கூறியுள்ளார்.
எப்ஸ்டீன் ஒரு சுவாரஸ்யமான மனிதர் என்று தாம் நினைத்தாகவும், தாம் என்ன செய்கிறோம் என்பதில் என்பதில் உண்மையில் அவருக்கு ஆர்வம் இல்லை என்று தாம் நினைப்பதாகவும் கூறியுள்ள பில் கிளிண்டன், 1993 முதல் 2001 வரை தான் அதிபராக இருந்தபோது எப்ஸ்டீன் 17 முறை வெள்ளை மாளிகைக்கு வந்து சென்றது தமக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பிரதிநிதிகள் சபை மேற்பார்வைக் குழுவிடம் சாட்சியளித்த முன்னாள் வெளியுறவு அமைச்சரும் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன், எப்ஸ்டீனை சந்தித்ததாக நினைவில் இல்லை என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே எப்ஸ்டீனைப் பற்றியும், அவரது வழக்கு தொடர்பான பல விஷயங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதே முழு விசாரணையின் நோக்கமாகும் என்று குடியரசுக் கட்சி தலைமையிலான பிரதிநிதிகள் சபை மேற்பார்வைக் குழுவின் தலைவரான ஜேம்ஸ் கோமர் தெரிவித்துள்ளார்.
















