நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர அடிப்படை உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் நியமனத்தில் 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் நேரு தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தனது தரப்பு வாதத்தைக் கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என நேரு தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களுக்கு அத்தகைய உரிமை இல்லை என தெரிவித்தது.
இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
















