ஈரான் கூறிய போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டதை விட விரைவில் போர் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்கிறது. ஈரான் மீதான போரின் நோக்கம் என்ன என்பது குறித்து மாறி மாறி விளக்கங்களை வழங்கி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்க இராணுவத்தின் வெற்றியைப் பற்றி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா களமிறங்கி இருக்காவிட்டால் ஈரான், இஸ்ரேல் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்கியிருக்கும் என்று தெரிவித்த ட்ரம்ப், மேலும் ஈரானின் 80 சதவீத ஏவுகணை ஏவுதளங்கள்,ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்து விட்டதாக கூறியுள்ளார்.
விமானப்படை, கடற்படை என ஈரானில் உள்ள ஒவ்வொரு படையையும் முற்றிலுமாக அழித்துவிட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட அந்நாட்டுக் கடற்படைக் கப்பல்களை அழித்ததாகவும், விமானப்படை மற்றும் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஏற்கனவே பல வழிகளில் வெற்றி பெற்றாலும், இன்னும் போதுமான அளவு வெற்றி பெறவில்லை என்று விவரித்த ட்ரம்ப், நீண்டகால ஆபத்தை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் இறுதி வெற்றியை அடைய முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நோக்கத்தை முழுமையாக அடைவதில் அமெரிக்கா பெரிய முன்னேற்றங்களை அடைந்து வருவதாக கூறிய ட்ரம்ப், தலைமை இல்லாத ஈரான், ஹார்மோஸ் ஜலசந்தியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால், இதுவரை தாக்கியதை விட 20 மடங்கு அதிகமாக ஈரானை தாக்குவோம் என்றும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவை ஈரான் 100 சதவீதம் தாக்க தயாராக இருப்பதாகவும், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமான ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளன என்றும், விரைவில் மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேல் முழுவதையும் ஈரான் தாக்குவார்கள் என்று கூறிய ட்ரம்ப், அதற்கு முன் ஈரானின் ட்ரோன்கள் உற்பத்தி ஆலைகளை அழித்துவிட்டால் மிகவும் பாதுகாப்பான இடமாக உலகம் மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதாவது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிற நட்பு நாடுகளுக்கு எதிராக நீண்ட காலத்துக்கு ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் ஈரானுக்கு இனி இல்லாதபோது போர் முடிந்துவிடும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த திங்கட்கிழமை, ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய ட்ரம்ப், ஈரான் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த திட்டங்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
போர் விரைவில் முடியும் என்ற ட்ரம்பின் அறிவிப்புக்கு, போரின் முடிவை தாங்கள்தான் தீர்மானிப்போம் என்று இஸ்லாமிய புரட்சிகர இராணுவப் படை அறிவித்துள்ளது. மேலும், மத்திய கிழக்கில் சமன்பாடுகள் மற்றும் எதிர்கால நிலை தங்கள் கைகளில் இருப்பதாகவும் அதனால் அமெரிக்காவால் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றும் IRGC தெரிவித்துள்ளது.
இதற்கிடையே உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதுகாக்க ஜி 7 நாடுகள் தயாராக இருப்பதாக கூறியுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஹார்மோஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான தற்காப்பு பணியில் பிரான்சும் மற்ற ஜி-7 நாடுகளும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்
















