இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயார்க் வந்தால் அவரை கைது செய்யும் சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக அந்நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி அறிவித்திருப்பது அமெரிக்கா, இஸ்ரேல், ஐ.நா. என சர்வதேச அரசியலையே பரபரப்பாக்கியுள்ளது. இது வெறும் அரசியல் கருத்தா…? அல்லது சர்வதேச சட்டத்தை முன்வைத்து எழுப்பப்பட்ட மிகப்பெரிய சவாலா…? விரிவாக பார்க்கலாம்…
வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபை பொது கூட்டத்தில் பங்கேற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி, நெதன்யாகுவை கைது செய்ய தனக்கு சட்டரீதியான அதிகாரம் உள்ளதா என்பதை சட்ட ஆலோசகர்களுடன் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்திருக்கிறார். அவர், நெதன்யாகுவை “போர்க்குற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தின் மையத்தில் இருப்பது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்தான்.
கடந்த 2024-ல் காசா போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
அமெரிக்கா, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்பினர் நாடாக இல்லாததால், அந்த வாரண்டை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்பதும் இந்த விவகாரத்தில் முக்கியமான சட்ட அம்சமாக பார்க்கப்படுகிறது.
ஒரு நகரத்தின் மேயர்… ஒரு நாட்டின் பிரதமரை கைது செய்வது பற்றி பேசுகிறார். இதைக் கேட்கும் சாதாரண மக்களுக்கே ஒரு கேள்வி எழுகிறது…
“சர்வதேச சட்டம் பெரியதா…? அல்லது இறையாண்மைமிக்க அதிகாரமா பெரியதா…?” இந்தக் கேள்விதான் இன்று உலக அரசியலின் மையமாக மாறியுள்ளது.
போர் முடிந்தாலும், அதில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் நினைவுகளும், நீதிக்கான கோரிக்கைகளும் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதையே இந்த விவாதம் மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ஆனால், மம்தானியின் அறிவிப்புக்கு அமெரிக்க தரப்பிலிருந்தும், இஸ்ரேல் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவின் ஐ.நா. தூதர் மைக் வால்ட்ஸ், இது அரசியல் நாடகம் மட்டுமே என்றும், அமெரிக்க கூட்டாட்சி சட்டங்களும், ஐ.நா. ஒப்பந்தங்களும் வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் ஐ.நா. தூதர் டேனி டானனும், மம்தானி தனது நகர நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.
ஒரு நகர மேயரால் மட்டும் வெளிநாட்டு அரசுத் தலைவரை கைது செய்வது நடைமுறையில் சிக்கலான விஷயம் என சர்வதேச சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க கூட்டாட்சி சட்டங்கள், சர்வதேச ஒப்பந்தங்கள், தூதரக பாதுகாப்பு உள்ளிட்ட பல சட்ட அம்சங்கள் இதில் குறுக்கிடக்கூடும்.
எனவே, மம்தானியின் இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அது நடைமுறையில் சாத்தியமாகுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
காசா போர், சர்வதேச நீதிமன்றம், அமெரிக்க சட்டம், இஸ்ரேலின் நிலைப்பாடு என இவை அனைத்தும் சந்திக்கும் இடமாக இந்த விவகாரம் மாறியுள்ளது.
நெதன்யாகு நியூயார்க் வரும்போது என்ன நடக்கும்…? மம்தானியின் அறிவிப்பு அரசியல் செய்தியாகவே முடிவடையுமா…? அல்லது சர்வதேச சட்ட விவாதத்தை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லுமா…? உலகின் கவனம் தற்போது அந்த தருணத்தை நோக்கியே திரும்பியுள்ளது.
















