ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட விக்ரம்-1 ராக்கெட், நாட்டின் முதல் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, புவி சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியின் பின்னால் உள்ள இஸ்ரோ முன்னாள் என்ஜினீயர்கள் குறித்து விரிவாக
பார்க்கலாம்…
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை தொடங்கிய பவன் குமார் சந்தனா மற்றும் நாகா பாரத் டாகா ஆகியோரின் பல ஆண்டுகால கனவும், கடின உழைப்பும்தான் இன்று இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் மைல்கல்லாக மாறியுள்ளது.
இந்த வெற்றியின் பின்னால் இருக்கும் பவன் குமார் சந்தனாவின் வாழ்க்கைப் பயணம் பல இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக உள்ளது.
பள்ளியில் படித்தபோது கணிதப் பாடத்தில் வெறும் 51 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த சராசரி மாணவர்தான் பவன் குமார். அந்த மதிப்பெண் அவரது கனவுக்கு தடையாக இருக்கவில்லை. மதிப்பெண்களை விட ஆர்வம் முக்கியம் என்பதை நிரூபிக்கும் வகையில், கடின உழைப்பால் ஐஐடி காரக்பூரில் இடம்பிடித்தார். அங்கிருந்து வளாகத் தேர்வு மூலம் இஸ்ரோவில் இணைந்தார்.
((GFX-IN)) திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பவன் சந்தனா, இந்தியாவின் கனரக ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி மார்க்-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றினார். வசதியாக மத்திய அரசு வேலையைத் தொடரலாம் என்ற வாய்ப்பு இருந்தும், இந்தியாவின் தனியார் விண்வெளித் துறைக்கு புதிய பாதையை உருவாக்க வேண்டும் என்ற கனவு அவரை வேறு வழியில் அழைத்துச் சென்றது.
அதேபோல, ஐஐடியில் உயர் கல்வி முடித்து, விமானவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அனுபவம் பெற்ற நாகா பாரத் டாகாவுடன் இணைந்து, 2018-ஆம் ஆண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை தொடங்கினார்.
ஐஐடி மெட்ராஸில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸில் முதுநிலை பட்டம் பெற்ற நாகா பாரத் டாகா, விமான வடிவமைப்பு, செமிகண்டக்டர் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் போதிய அனுபவம் வாய்ந்தவர்.
ஆரம்பத்தில் பலரும் சந்தேகத்துடன் பார்த்த அந்த நிறுவனம், இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி ஆலமரமாக உயர்ந்து நிற்கிறது. அண்மையில் நாட்டின் மிகப்பெரிய தனியார் ராக்கெட் உற்பத்தி நிலையத்தையும் ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கியுள்ளது. ((GFX-OUT))
2022-இல் விக்ரம்-எஸ் மூலம் முதல் வெற்றியைப் பதிவு செய்த ஸ்கைரூட், தற்போது விக்ரம்-1 மூலம் இந்தியாவை தனியார் விண்வெளி ஏவுதள திறன் கொண்ட நாடுகளின் வரிசையில் முன்னேற்றியுள்ளது. இந்த வெற்றியானது, இந்தியாவின் விண்வெளித் துறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது.
ஒரு காலத்தில் கணிதத்தில் 51 மதிப்பெண்கள் எடுத்த மாணவர், இன்று இந்தியாவின் விண்வெளிக் கனவுகளுக்கு புதிய திசையைக் காட்டிய தொழில்முனைவோராக உயர்ந்திருக்கிறார்.
மதிப்பெண்கள் ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்காது. ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால், வானம் மட்டுமல்ல, விண்வெளியும் எட்டக்கூடிய இலக்குதான் என்பதை பவன் சந்தனாவும், நாகா பாரத் டாகாவும் மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்துள்ளனர்.
















