சவூதி அரேபியாவுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் போன்று எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டிற்கு ஈடாக பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து குவைத்துடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஈரான் போர் மீண்டும் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நேரத்தில் ஈரானின் ராணுவத்தளங்கள், ஏவுகணை சேமிப்பு, மாற்று ஏவு தளங்கள் மற்றும் மின்சக்தி நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்களை நடத்தி வருகிறது. பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.
இதற்கிடையே ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் செயல்பட்டுவரும் ஹெளதிகள், சவூதி அரேபியா மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். ஏற்கெனவே சவூதியுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பாகிஸ்தான் வேறுவழியில்லாமல் ஈரானுக்கு எதிராக சவூதிக்கு ஆதரவாக களமிறங்கவேண்டிய நிலையில் உள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிகப் போர் நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட இடைத்தரகராக பணியாற்றிய பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தினால், அது ‘சிவப்பு கோட்டை’ தாண்டுவதாகும் என்று கடுமையாக எச்சரித்துள்ளது.
பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவூதி அரேபியாவுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் தாக்குதலும் தனக்கு எதிரானதாகக் கருதி அதாவது ‘ஒருவர் மீதான ஆக்கிரமிப்பு, இருவர் மீதான தாக்குதல்’ என்ற அடிப்படையில் பாகிஸ்தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வளைகுடாவில் ஈரானின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் போர் பாதுகாப்புக்காக உலகின் ஒரே இஸ்லாமிய அணுசக்தி நாடான பாகிஸ்தானுடன் குவைத் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் துருப்புகள், போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்துவது உட்பட, வலிமையான படைபலத்தை பாகிஸ்தானிடம் குவைத் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப் படுகிறது.
இதற்குப் பதிலாக, மேம்படுத்தப்பட்ட எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் முதலீட்டு உதவிகளையும் மற்றும் பிணைக்கப்பட்ட எரிபொருள் சேமிப்பு வசதிகளையும் பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக கூறப் படுகிறது.
பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், இந்த நேரத்தில் குவைத் எல்லையில் துருப்புகளை நிலைநிறுத்துவது குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
முன்னதாக, 2023ம் ஆண்டு முதல் பயிற்சி மற்றும் கூட்டுப் பயிற்சிகளுக்காக பாகிஸ்தானுடன் மிகவும் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தைக் குவைத் ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானும் குவைத்தும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்ய முடியுமா என்பதல்ல கேள்வி. மாறாக, அதனால் வரும் விளைவுகளைப் பாகிஸ்தானால் தாங்க அல்லது தவிர்க்க முடியுமா என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.
















