பிரம்மோஸ், அக்னி போன்ற ஏவுகணைகள் நாட்டின் பாதுகாப்பு அடையாளங்களாக பார்க்கப்படும் நிலையில், சப்தமே இல்லாமல் களமிறங்கி வருகிறது மற்றொரு உள்நாட்டு ஏவுகணை. எதிரியின் ராணுவ இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ‘பிரளய்’ ஏவுகணை, இந்தியாவின் புதிய தாக்குதல் ஆயுதமாக உருவெடுத்து வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்…
இந்தியாவின் ஏவுகணைத் திட்டம் கடந்த பல ஆண்டுகளாக அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. வான்வழி பாதுகாப்பு அமைப்பு முதல் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைவரை பல்வேறு தொழில்நுட்பங்களை இந்தியா உருவாக்கி உலகை மிரள வைக்கிறது.
பாதுகாப்புத் துறையில் அக்னி மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் மட்டுமே பெரும்பாலும் பேசப்படும் நிலையில், தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்டு ‘பிரளய்’ ஏவுகணை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கியுள்ள இந்த ஏவுகணை, குறுகிய தூரத்தில் எதிரியின் ராணுவ இலக்குகளை துல்லியமாக தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நவீன போர்முறைகளில் எதிரியின் கட்டுப்பாட்டு மையங்கள், வான் பாதுகாப்பு அமைப்பு, ஆயுதக் கிடங்கு மற்றும் விமானத் தளங்கள் போன்ற முக்கிய இலக்குகளை வேகமாகவும் துல்லியமாகவும் தாக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.
போர் விமானங்களை நேரடியாக அனுப்பாமல், தொலைவில் இருந்தே தாக்குதல் நடத்தக்கூடிய திறனை வழங்குவதற்காகவே பிரளய் உருவாக்கப்பட்டுள்ளது. திட எரிபொருளில் இயங்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணை, சாலை வழியாக எடுத்துச் செல்லக்கூடிய மொபைல் ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படுகிறது.
பொதுவாக பாலிஸ்டிக் ஏவுகணைகள் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணிக்கும் திறன்வாய்ந்தவை. ஆனால் பிரளயின் தனிச்சிறப்பு என்னவென்றால், இலக்கை நெருங்கும் இறுதிக்கட்டத்தில் கூட அதன் திசையை மாற்றும் திறன் கொண்டதாக இருப்பதுதான். இதனால் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளால் அதை இடைமறிப்பது மிகவும் கடினம்.
பிரளய் ஏவுகணை சுமார் 150 முதல் 500 கிலோமீட்டர் தூரம் வரை இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. 350 முதல் 700 கிலோ எடை வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்லக்கூடிய இந்த ஏவுகணையை, ராணுவ இலக்குகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கவும் முடியும். இதுதான் பிரளயின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.
திசையை அறியும் அதிநவீன நேவிகேஷன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், எந்தவித இலக்கையும் எளிதில் அடையும் திறன் இதற்கு உள்ளது.
பிரளயின் மற்றொரு ப்ளஸ் பாய்ண்ட் அதன் இயக்கத் திறன். சாலை வழியாக வேகமாக இடமாற்றம் செய்ய முடியும் என்பதால், எதிரி நாடுகளின் ரேடார் உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்புகளின் கண்ணில் படாமல், இதனால் எளிமையாக தப்ப முடியும். மேலும், பழைய திரவ எரிபொருள் ஏவுகணைகளைப் போல நீண்ட நேர தயாரிப்பு தேவையில்லை.
டிஆர்டிஓ நடத்திய பல்வேறு சோதனைகளில் பிரளய் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. குறிப்பாக 2021-ஆம் ஆண்டு ஒடிசா கடற்கரையில் நடைபெற்ற தொடர்ச்சியான சோதனைகளில், அதன் துல்லியமும், திசைமாற்றும் திறனும் உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து 2023ஆம் ஆண்டு ராணுவத்திற்காக பிரளய் ஏவுகணைகளை வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியது. பிரம்மோஸ் மற்றும் பிரளய் இரண்டும் துல்லிய தாக்குதலுக்காக உருவாக்கப்பட்டாலும், அவற்றின் செயல்பாடுகளில் வேறுபாடு உள்ளது.
அதிவேக க்ரூஸ் ஏவுகணையான பிரம்மோஸ், தரை மற்றும் கடல் இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. ஆனால் பாலிஸ்டிக் ஏவுகணையான பிரளய், எதிரியின் கட்டுப்பாட்டு மையங்கள், விமானத் தளங்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை வேகமாக தாக்குவதில் அதிக பலம் கொண்டது.
இதனால் பிரம்மோஸுக்கு மாற்றாக அல்லாமல், அதற்கு துணையாக செயல்படும் ஆயுதமாக பிரளய் பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்தியாவின் ஏவுகணை பட்டியலில் பிரளய் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
துல்லியம், வேகம், இயக்கத் திறன் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருசேரப் பெற்றுள்ள இந்த ஏவுகணை, ராணுவத்தின் வலிமைக்குப் புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது. எதிரியின் இலக்குகளை கணநேரத்தில் தாக்கும் திறனுடன், இந்தியாவின் பாதுகாப்பு வியூகத்தில் ‘பிரளய்’ புதிய சகாப்தத்தை தொடங்கியிருக்கிறது.
















