நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மரை தயாரித்து, மத்திய பிரதேசத்தின் பீனா தேசிய சோதனை நிலையத்தில் வெற்றிகரமாகநிறுவப் பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவையே பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு அடுத்தபடியாக 1200 kV அல்ட்ரா ஹை வோல்டேஜ் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக இயக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சாரத் தேவை 500,000 மெகாவாட்-க்கும் அதிகமாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. இதற்கேற்ப சுமார் 700,000 மெகா வாட் நிறுவப்பட்ட உற்பத்தித் திறன் தேவைப் படும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது.
உற்பத்தி செய்யப்படும் இந்த மின்சாரம், சரியாக வெளியேற்றப்படுவதும் முறையாக கொண்டுசெல்லப் படுவதும் மற்றும் சிதறல் இல்லாமல் வீணாகாமல் விநியோகப் படுவதும் அவசியமாகிறது.
நீண்ட தூரங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான மிகப்பெரிய மின் மாற்றி நெட்வொர்க்கும் அதற்கான சுற்றுச் சூழல் அமைப்பும் அதிநவீன தொழில்நுட்பமும் தேவைப் படுகிறது.
குறிப்பாக இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான வழித்தட உரிமை சார்ந்த கூடுதல் சவால்களும் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை, வடமாநிலங்களில் தான் அதிகமான மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அதிகமான மின்சாரத் தேவை முதன்மையான தொழில் மையமான மேற்கு தெற்கு மற்றும் மத்திய பகுதி மாநிலங்களில் தான் உள்ளன. இதற்காக நாட்டின் கடலோரப் பகுதிகளில் பெரும்பான்மையான மின்சார உற்பத்தி திட்டங்கள் செயல்பட்டு வந்தாலும் உற்பத்தியாகும் மின்சாரத்தை வீணாகாமல் நீண்ட தூரம் கொண்டு செல்வது சிரமமாகவே உள்ளது.
தற்போதுள்ள 400KV மின்பாதையின் மூலம் 600 MW மின்சாரத்தையே பரிமாற்றம் செய்யமுடியும். இதன்படி 800KV மின்பாதையின் சுமை திறன் 1200 முதல் 2400 MV வரை உள்ளது. 1200 KV மின்பாதையின் மின் செலுத்தும் திறன் 6000 முதல் 8000 MV வரை உள்ளது. நீண்ட தூரங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டுசெல்வதற்கு இது ஒன்றே ஒரே தீர்வாகும்.
நீண்ட கால மின் பரிமாற்ற தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டில் உள்ள அனைத்து மின் நிலையங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு பெரிய மின் மாற்று நெட்வொர்க்கை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
அதிகரித்துவரும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்கான மின் பாதை பரிமாற்றத்துக்காக முதல் முயற்சியாக 1200 KV மின் பரிமாற்ற அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.
குறைந்த இழப்புடன் அதிகப்படியான மின்சாரத்தை நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்வதற்காக 333 MVA திறன் கொண்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு 1200 kV அதி உயர் மின்னழுத்த மாறுதிசை மின்னோட்ட (UHVAC) மின்மாற்றியை BHEL நிறுவனம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
ஏற்கெனவே ஒரு துணை மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய உபகரணமான இந்த மின்மாற்றியை உருவாக்குவதற்காக, BHEL நிறுவனம் பவர்கிரிட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.
BHEL நிறுவனத்தால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட 333 MVA, 1150/400/33 kV, ஒற்றைக் கட்ட, ஆட்டோ மின்மாற்றியானது, பவர்கிரிட் நிறுவனத்தால் மத்தியப் பிரதேசத்தின் பீனாவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் சோதனை 1200 kV தேசிய சோதனை நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் 1200 kV அல்ட்ரா ஹை வோல்டேஜ் (UHVAC) தொழில்நுட்பம் மத்திய பிரதேசத்தின் பீனா தேசிய சோதனை நிலையத்தில் வெற்றிகரமாக நிறுவப் பட்டுள்ளது. இது 6000 MW முதல் 8000 MW வரை மின்சாரத்தைச் சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டதாகும்.
1200 kV அதி உயர் மின்னழுத்த மாறுதிசை மின்னோட்ட மின்மாற்றியை வெற்றிகரமாகச் செயல்பாட்டிற்குக்
கொண்டு வந்திருப்பதுடன் நாட்டில் முதல் வணிகரீதியான 1200 kV மின்பரிமாற்ற அமைப்பை உருவாக்கி இருப்பது இந்தியாவின் சாதனையாகும்.
















