கர்நாடகாவில் மான்களை வேட்டையாட சென்றதாகக் கூறி தமிழர்கள் மூன்று பேரை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து ஹனூர் வனச்சரக அலுவலகம் சூறையாடப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த 4 பேரை துரத்திப் பிடிக்க முயன்ற வனத்துறையினர், அவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் தப்பியோடியதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் ஹனூர் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிர்ச்சியடைந்த அவர்களது உறவினர்களும், கிராம
மக்களும், கொள்ளேகால், ஹனூர், தோமையார்பாளையம், ஜகன்னாத தொட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதோடு, அங்குள்ள பொருட்களையும் சூறையாடினர்.
துப்பாக்கிச்சூடு நடத்த வனத்துறைக்கு யார் உரிமை கொடுத்தது என்று முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், வனச்சரக அலுவலகம் அருகே சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, சம்பவ இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், உயிரிழந்த மூன்று பேரின் உடல்கள் மைசூர் கே.ஆர் அரசு மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன.
இதனிடையே 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















