பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் ஊடுருவலை விரட்டி அடித்த துணிச்சல் மிக்க கார்கில் போர் நினைவு நாளான இன்று லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில், பாதுகாப்பு அமைச்சர், முப்படை தலைமை தளபதி, ராணுவ தளபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கார்கில் தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில்,
கார்கிலில் வெற்றி பெற்ற இந்த நாளில், அனைத்து நாட்டு மக்களும் நமது இந்திய ராணுவத்தின் அசாதாரண வீரத்தால் அடைந்த வெற்றியை நினைவு கூர்கின்றனர். நாட்டைக் காக்க உயிர் தியாகம் செய்து வெற்றிக்கு வழி வகுத்த போராளிகளுக்கு, தேசத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தி தலைவணங்குகிறேன். அவரது வீரச் சாக கதைகள் வருங்கால சந்ததியினரை எப்போதும் ஊக்குவிக்கும் என தெரிவித்துள்ளார்.
கார்கில் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்
கார்கில் வெற்றி தினம், இந்தியாவின் அற்புதமான, துணிச்சலானவர்களின் வீர சாகசத்தை முன்னுக்கு கொண்டு வருகிறது. அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார்கள். இந்த சிறப்பான நாளில், அவர்களுக்கு தலைவணங்குகிறேன். வாழ்க இந்தியா எனக்கூறியுள்ளார்.
கார்கில் ஸ்ரீநகரில் இருந்து 210 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு குளிர் காலத்தில் வெப்பநிலை மைனசுக்கும் கீழ் (-48 டிகிரி செல்சியஸ்) இறங்கிவிடும். இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும், ஒப்பந்தத்தின் அடிப்படையில், செப். 15 முதல் ஏப். 15 வரை கார்கில் மலைச் சிகரங்களில் இருந்து திரும்பி விடுவர். ஏப்ரலின் பிற்பாதியில் வழக்கமான நிலைகளில் பாதுகாப்பு பணிகளை தொடர்வது வழக்கம்.
கடந்த 1999 ஏப்ரலில் கார்கிலில் மீண்டும் பாதுகாப்பு பணியை தொடர சென்ற இந்திய ராணுவத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான், ராணுவம், பயங்கரவாதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு இந்திய பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எல்லை தாண்டி இந்திய நிலைகளுக்குள் ஊடுருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது திடீரென நடந்தது அல்ல, பாகிஸ்தான் தனது துருப்புக்களையும் துணை ராணுவப் படைகளையும் ‘ஆபரேஷன் பத்ர்’ எனும் திட்டத்தின் கீழ் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் இந்தியப் பகுதிக்கு அனுப்பியது. காஷ்மீரில் இருந்து லடாக்கைத் துண்டித்து, சியாச்சின் பள்ளத்தாக்கு மக்களை கைப்பற்ற பாகிஸ்தான் திட்டமிட்டது. காஷ்மீர் மக்களை காக்க பாகிஸ்தானின் எந்த நிபந்தனைகளையும் இந்தியா ஏற்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது.
“ஆபரேஷன் விஜய்” என்ற பெயரில் சியாச்சின் பகுதியை மீட்டெடுக்க, கார்கில் போர் மே 8, 1999 முதல் ஜூலை 26, 1999 வரை நடைபெற்றது. கார்கிலைப் பாதுகாக்க சிறப்புப் படைகளுடன் கிட்டத்தட்ட 30,000 துருப்புக்கள் கார்கில்-திராஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். 527 வீரர்கள் இந்த போராட்டத்தின்போது உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருந்த நிலைகளை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்கியது. சபெட் சாகர் என்ற பெயரில் இந்திய விமானப்படை 32,000 அடி உயரத்தில் தனது தாக்குதலை நிகழ்த்தியது. இந்தியாவின் பெண் சீட்டா பைலட் குஞ்சன் சக்சேனா தனது உயிரை துச்சமென எண்ணி எல்லை பள்ளத்தாக்கில் இருந்த வீரர்களை மீட்டார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் அப்போதைய ராணுவ ஜெனரல் பர்வேஸ் முஷாரப், பாகிஸ்தான் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் மஹ்மூத் அஹ்மத் மற்றும் மேஜர் ஜெனரல் ஜாவேத் ஹசன் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் அஷ்ரப் ரஷீத் ஆகியோர் மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் அப்போதைய பிரதமராக நவாஸ் ஷெரீப் விளங்கினார்.
ஜூலை 26, 1999 அன்று பாகிஸ்தான் துருப்புக்கள் யாவும் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இது இந்தியாவுக்கு ஆதரவாக போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
கார்கில் மலையைப் பாதுகாக்க தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, கேப்டன் விக்ரம் பத்ரா, கேப்டன் கெய்ஷிங் கிளிஃபோர்ட் நோங்ரம் போன்ற வீரர்களுக்கு மரணத்திற்குப் பின் பரம் வீர் சக்ரா மற்றும் மகாவீர் சக்ரா விருதுகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். லடாக்கின் ட்ராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் நினைவிடத்தில், மத்திய பாதுகாப்புததுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே , கடற்படை தளபதி ஹரி குமார், விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
கார்கில் போர் நினைவிடத்திற்கு மேல், நான்கு மிக் 29 ரக போர் விமானங்கள் பறந்து அஞ்சலி செலுத்தின.
ராணுவத்திற்கு சொந்தமான சீட்டல் ஹெலிகாப்டர் போர் நினைவிடத்திற்கு மேல் பறந்து, மலர் தூவி மரியாதை செலுத்தின. இதேபோல் கார்கில் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்