கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகர் கோவில் செல்லும் வழியில் பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் பட்டாசு ஆலை வைத்துள்ளார். இன்று காலை எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தப் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் காயமடைந்த நிலையில் இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? எனத் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நடந்த இடத்திற்குக் கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு, காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து முறையான பாதுகாப்பு இன்றி பட்டாசு ஆலை அமைக்கப்பட்டதால், பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து இந்த விபத்து நடந்ததா? அல்லது மின்கசிவு காரணமாக இந்த பட்டாசு ஆலை வெடித்து சிதறியதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
தீ விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் ரவி, மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரித்திகா, மகன் ரித்திஷ் ஆகியோர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலை அருகில் இருந்த உணவகத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி, இப்ராஹிம், இம்ரான் உள்பட 9 பேர் பலியாகினர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த இப்ராஹிம், இம்ரான் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.