தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் அமரும் இடம் உள்ளிட்ட 13 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்களுக்கும் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பயணம் மேற்கொள்ள வந்திருந்த இரண்டு மாற்றுத்திறனாளிகளை சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் ஏற்ற மறுத்ததாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
இதன் எதிரொலியாக மாற்றுத்திறனாளிகள் துறை 13 விதிமுறைகளை போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைத்தது. அதன்படி, அனைத்து அரசு பேருந்துகளிலும் மாற்றுத்திறனாளிகள் அமரும் இடம் குறித்த ஸ்டிக்கர்கள் உடனடியாக ஒட்டப்பட வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் வேறு யாரையும் அமர்த்தக் கூடாது, மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும் ஓட்டுநர் கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக பின்பற்ற வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்களுக்கும் போக்குவரத்து துறை சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழிமுறைகளை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பின்பற்றுக்கிறார்களா என்பதை மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டடுள்ளது.
















