கோவில் உண்டியல்களைக் கையாளுவது தொடர்பான விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தெரிவிக்கும்படி அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் 99.7 சதவீத கோவில்களில் அறங்காவலர்கள் இல்லை எனவும், அரசு அதிகாரிகளைத் தக்கார்களாக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர்களை நீக்க உத்தர்விட வேண்டும் என திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்ககராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சிறப்பு அமர்வில் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி அமர்வு, அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான மூன்று வழக்குகளை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதேபோல, அறங்காவலர்கள் இல்லாத கோவில்களில் உண்டியல்களை கையாள தக்கார்களுக்கு தடை விதிக்க கோரியும் ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாததால் இரு சாவிகளையும் கோவில் தக்கார்கள் வைத்திருப்பதாக கூறியிருந்தார்.
இந்து சமயஅறநிலையத் துறை சட்டத்தில், கோவில் உண்டியலின் இரு சாவிகளில் ஒன்று அறங்காவலர் குழு வசமும், மற்றொன்று செயல் அலுவலர் வசமும் இருக்க வேண்டும். அறங்காவலர்கள் இல்லாத போது தக்காரும், சம்பந்தப்பட்ட அதிகாரியும் உண்டியலை கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி அமர்வு, இந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணை செப்டம்பர் 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.