முதலமைச்சரின் எலும்பை உடைப்பேன் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இரு தினங்களுக்கு முன்பு நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், சட்டமன்றத்தை கூட்டும்போது முதலமைச்சருக்கு எலும்பு இருக்காது என்றும், முதலமைச்சரின் எலும்பை உடைத்துவிட்டு தான் அனுப்புவோம் என மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியிருந்தார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் தவெகவினர் புகார் மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, திமுக எம்எல்ஏ மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 2 டிஎஸ்பி தலைமையிலான போலீசார், அம்பாள் நகரில் உள்ள வீட்டிற்கு சென்று திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை கைது செய்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அழைத்து சென்றனர். கைது நடவடிக்கையின்போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எம்எல்ஏ மார்க்கண்டேயனிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், எஸ்பி அலுவலகம் முன்பு திமுகவினர் திரண்டு வருகின்றனர். எம்எல்ஏவை பார்க்க வழக்கறிஞர் உள்ளிட்டோருக்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
















