பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியானதால் விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் கிடைத்துள்ளன.
அதில், 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி பழனி கோயில் நிலப் பரிமாற்றம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையின் அறங்காவலர் என்ற பெயரில் எம்.டி. முருகதாஸ் என்பவர் விற்பனையாளராக இருந்து நிலத்தைக் கைமாற்றியுள்ளதாகவும், பழனி கோயில் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர் வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
பழனி சார்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட பழைய நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, இந்தச் சொத்துப் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, ஒட்டுமொத்த சொத்தின் விற்பனைத் தொகையாக 2 கோடி ரூபாய் என ஆவணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும், 2 கோடி ரூபாயும் தலா 50 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட 4 காசோலைகளாக கடந்த மார்ச் 27ஆம் தேதியே வழங்கப்பட்டதாக பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிடைத்துள்ள கிரையப் பத்திரம் மற்றும் நீதிமன்ற உத்தரவு தொடர்பான விவரங்கள் பழனி கோயில் நில முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் அடுத்தகட்ட விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















