தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நடைபெற்ற அகழ்வாய்வு பணிகளை பார்வையிட்ட அமைச்சர் ராஜ்மோகன், முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் விமர்சனத்துக்கு நக்கலாக பதிலளித்தார்.
கரிவலம்வந்தநல்லூர் அருகே மலையடிப்பட்டியில் தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் அகழ்வாய்வைப் பார்வையிட்ட அமைச்சர் ராஜ்மோகன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விசார் சுற்றுலா திட்டமும், ஆட்டிசம் குழந்தைகளுக்காக மாதம் ஒருமுறை உலகத் தரமான திரைப்படங்கள் திரையிடும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்றார்.
பழனி கோவில் நில முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்டபோது, “ஊழல் குறித்து அவர் பேசுவது நகைச்சுவையாக உள்ளது” என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், அரசின் பல புதிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.
















