பழனி கோயில் நில மோசடி வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் என்பவரின் வீட்டுக்கு சீல் வைத்து 50க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
தண்டயுதபாணி சுவாமி மட அறக்கட்டளைக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக தனிநபருக்கு 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திரவுப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில், நிலத்தை விற்றவர் விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் என்பதும், இவர் தண்டபாணி சுவாமி அறக்கட்டளை நிர்வாகி மற்றும் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இவர் பழனி மற்றும் வெள்ளதுரை ஆகிய இருவருக்கு இந்த நிலத்தை விற்பனை செய்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து முருகதாஸ் வீட்டிற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.
















