பாகிஸ்தான் – பஞ்சாப் எல்லையில் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டின் 53 ஆளில்லா குட்டி விமானங்கள் சட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, ஒரு எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக், “பஞ்சாப்பில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லை வழியாக தேச விரோத சக்திகள் மற்றும் கடத்தல்காரர்கள் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தி, ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை கடத்துகின்றனர்.
இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளில் ஜூன் 30-ம் வரை, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய 53 ஆளில்லா குட்டி விமானங்கள் நமது வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீர்ர்கள் மூலம் நமது நாட்டின் எல்லைகளை 24 மணி நேரமும் கண்காணித்தல், திறம்பட ஆதிக்கம் செலுத்துதல், ரோந்துப் பணி, நாகாக்கள் இடுதல் மற்றும் சர்வதேச எல்லையில் கண்காணிப்பு நிலைகளை நிர்வகித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், இது தொடர்பாக எல்லைப் பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, ஆளில்லா குட்டி விமானத்தின் நடமாட்டம் கண்டறியப்பட்டால், உடனடியாக உள்ளூர் காவல்துறையினருக்கும், எல்லை பாதுகாப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆளில்லா குட்டி விமானங்களை கையாள்வது தொடர்பான தொழில்நுட்பத்தை மதிப்பிடுவதற்கும், பதிலடி கொடுப்பதற்கும் எல்லை பாதுகாப்புப் படை ஆணையத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் முரட்டு ஆளில்லா விமானங்கள் தொழில்நுட்பக் குழுவை நியமித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.