இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், சீட்டுக்கட்டு போல பல வீடுகள் சரிந்து விழுந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கியப் பருவமழை, தீவிரமடைந்திருக்கிறது. இதனால், மாநிலம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இடை இடையே ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாகவும், மழை கொட்டியது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை மற்றும் நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், நிலச்சரிவு, மழையால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த மாநிலத்தையும் பேரிடர் பாதித்த மாநிலமாக முதல்வர் சுக்விந்தர் சுகு அறிவித்திருக்கிறார். மேலும், மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 2,022 வீடுகள் முழுமையாக சேதமடைந்திருப்பதாகவும், 9,615 வீடுகள் பாதியளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும், 113 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த இழப்பு 8,014.61 கோடி ரூபாய் என்று முதல்வர் சுக்விந்தர் சுகு தெரிவித்திருக்கிறார்.
அதேசமயம், இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், குல்லு மாவட்டம் அன்னி நகரில் நேற்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சீட்டுக்கட்டு போல ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் மக்கள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுதொடர்பான காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மலை அடிவாரத்தில் உள்ள கட்டடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிவதை காண முடிகிறது. இந்தக் காணொளியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சுகு, “இமாச்சல் பிரதேசத்தின் குலு மற்றும் அன்னி பகுதிகளில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த பேராபத்தை முன்கூட்டியே கண்டறிந்து, 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதிகளில் இருந்த அனைவரும் வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டு விட்டனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
இது ஒருபுறம் இருக்க, இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு வண்ண (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.