மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்த வேண்டும் என முதல்வர் விஜய்க்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்திய நாட்டின் மிக நீண்ட காலப் பிரதமராக, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஆட்சி செய்து கொண்டிருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி என தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் பாரதப் பிரதமர் மறைந்த திரு ஜவகர்லால் நேரு அவர்களின் நீண்டகால ஆட்சி சாதனையையும் அவர் முறியடித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாவும் அவர் கூறியுள்ளார்.
மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நமது பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நீண்ட கால ஆட்சிக்கு, அச்சாரமிட்டு, அடித்தளமாக இருந்தது அவரது அயராத உழைப்பிலும், சீரிய சிந்தனையிலும் உருவாக்கப்பட்ட, மக்கள் நலத் திட்டங்களே ஆகும். அவைகள் தான் இந்த வரலாற்றுச் சாதனைக்கு உறுதுணையாய் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்
இந்த சாதனைக்குரிய, மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் அமல்படுத்தி, அபார வளர்ச்சியை கண்டுவருகின்றன என்றும் அவ்ர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மத்திய, மாநிலங்களின் கூட்டுறவு தான் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் என்ற பிரதமரின் கருத்தை வலுப்படுத்துவது போல, ஜோசப் விஜய் தலைமையிலான த வெ க அரசு மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷின் 2.0 திட்டத்தை 2028 ஆம் ஆண்டு வரை நீடித்திருப்பது பாராட்டுக்குரியது என கூறியுள்ளார்.
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி ஆர் பாட்டில் மற்றும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பது, ஒன்றுபட்ட இந்தியாவின் வளர்ச்சிக்கு ஓர் உதாரணம் என தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்த ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 46.71 லட்சம் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, 1.86 கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இத்திட்டத்தின்படி மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மூலம் தமிழ்நாட்டிற்கு ரூபாய் 2,177.77 கோடி நிதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் வெப்பமயமாகுதல், காடுகளை அழித்தல், பருவநிலை மாற்றங்கள் ஆகியன பூமிபந்தை பாதிப்பதால் நீர்நிலைகளில் கடுமையான வறட்சி நிலை ஏற்படுகிறது. உலகளவில் இந்த பிரச்சனைகளை தீர்க்கவும், மக்களுக்கான சுற்று சூழலை பேணி பாதுகாக்கவும் திரு நரேந்திர மோடி அவர்களின் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்ததுள்ளார்.
நமது கங்கைநதி உட்பட அனைத்து நதிகள், குளங்கள் மற்றும் குட்டைகளை பாதுகாக்கவும், கிராமங்கள் முன்னேற்றம் மற்றும் வேளாண் குடிகளின் நலங்களை பாதுகாக்கவும், பாரதிய ஜனதாவின் மத்திய அரசு பல சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, மத்திய அரசின் மகத்தான மக்கள் நலத் திட்டங்களை, த வெ க அரசு முந்தைய திமுக அரசை போல் மொழி, இனம், அரசியல் ஆகிய சாயங்கள் பூசி, பிரிவினைவாதம் செய்யாமல் தமிழக மக்களுக்கு மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டுமென நயினார் கேட்டுக்கொண்டுள்ளார்.
















