சென்னை புளியந்தோப்பு அரசு பள்ளி திறப்பு விழாவில், மேயர் பிரியா மற்றும் தவெக எம்எல்ஏ பல்லவி இடையே பனிப்போர் வெடித்துள்ளது.
திரு.வி.க. நகர் தொகுதியில் உள்ள புளியந்தோப்பில் இயங்கி வரும் சென்னை மாநகராட்சி பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த சென்னை மேயர் பிரியா குத்துவிளக்கை ஏற்றி வைத்தார்.
அப்போது, மெழுகுவர்த்தியை தவெக எம்எல்ஏ பல்லவியிடம் கொடுக்காமல், அருகில் இருந்த ஐஏஎஸ் அதிகாரியிடம் கொடுத்துவிட்டார்.
இதனால், அதிருப்தியடைந்த தவெக எம்எல்ஏ பல்லவி, தான் அவமரியாதை செய்யப்பட்டதாக உணர்ந்து நிகழ்ச்சியை புறக்கணித்து வெளியே சென்றார்.
அதைத்தொடர்ந்து சென்னை நம்மாழ்வார்பேட்டையில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் மேயர் பிரியா அளித்த மெழுகுவர்த்தியை வாங்க மறுத்து தவெக எம்எல்ஏ பல்லவி அலட்சியப்படுத்தியுள்ளார்.
திரு.வி.க.நகர் நம்மாழ்வார்பேட்டை சுப்புராயன் ஒன்றாவது தெருவில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சென்னை தொடக்கப் பள்ளியின் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயர் பிரியா, கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கை ஏற்றிவைத்தார். தொடர்ந்து, எம்எல்ஏ பல்லவியிடம் மெழுகுவர்த்தியை கொடுத்தபோது அதனை வாங்க மறுத்த அவர், தாங்களே ஏற்றுங்கள் எனக்கூறி அலட்சியப்படுத்தியுள்ளார்.
















