நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் மங்கள் மிலன் என்ற பெயரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அர்ஜுன் ராம் மேக்வால், கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த தகவல்கள் வெளியான உடனேயே அரசு விரைந்து செயல்பட்டதாகவும், இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக பிரதமர் கூறியதாகவும் தெரிவித்தார். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க, நீட் மறுதேர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அது வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்பட்டதாக பிரதமர் தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், நாட்டின் சிறந்த வழக்கறிஞர்களின் உதவியுடன் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
















