டெங்கு, மலேரியா, ஜிகா வைரஸ், சிக்குன்குனியா என ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கும் கொசுக்களுக்கு எதிராக இப்போது ஏஐ மைக்ரோ டிரோன் களமிறங்கியுள்ளது. உள்ளங்கை அளவிலான ஒரு குட்டி டிரோன் கொசுக்களை எப்படி வேட்டையாடுகிறது? விரிவாக பார்க்கலாம்…
உலகிலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் எதுவென கேட்டால் நமது சிந்தனை, சிங்கம், புலி, கரடி என வனவிலங்குகளைத் தேடிச் செல்லும். ஆனால், நமது வீட்டுக்குள், நம் அருகிலேயே இருக்கும் கொசுவை அத்தனை எளிதாக நாம் எடுத்துக் கொள்வதில்லை. இதற்கு காரணம் அதன் உருவம்…
ஆனால் உலக சுகாதார அமைப்பானது, உலகிலேயே மிகவும் ஆபத்தான உயிரினம் கொசு என வரையறுத்துள்ளது. கொசுக்களால் பரவும் மலேரியா தாக்கி கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 6,10,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் 5 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் அதிகம் என்பது இன்னொரு அதிர்ச்சிக்குரிய தகவல்.
இந்த நிலையில்தான் கொசுக்கடிக்கு நிரந்தர தீர்வு காண அமெரிக்காவைச் சேர்ந்த டார்ன்யோல் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் களமிறங்கியுள்ளது. அந்நிறுவனம் உருவாக்கியுள்ள ஏஐ மைக்ரோ டிரோன், அண்மையில் மனிதர்களின் உதவியின்றி பறந்துகொண்டிருந்த ஒரு பூச்சியை வானிலேயே கண்டறிந்து தாக்கி அழித்துச் சாதனை படைத்துள்ளது.
இந்த டிரோனின் சிறப்பு என்னவென்றால், அது கேமராவை மட்டுமே சார்ந்து இருப்பதில்லை. அல்ட்ராசோனிக் சோனார் தொழில்நுட்பம், நூற்றுக்கணக்கான மைக்ரோஃபோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உதவியுடன், கொசுவின் சிறகுகள் அடிக்கும் ஒலியைக் கூட அடையாளம் கண்டு, அது இருக்கும் இடத்தை மிகத் துல்லியமாகக் கணிக்கிறது இந்த குட்டி டிரோன். அதன் பிறகு சில நொடிகளில் கொசுவை நெருங்கி வானிலேயே அதைத் துவம்சம் செய்துவிடுகிறது.
கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, ஜிகா வைரஸ் போன்ற நோய்களால் எண்ணற்ற குடும்பங்கள் ஆண்டுதோறும் பாதிக்கப்படுகின்றன. அந்த பாதிப்பைக் குறைக்கும் வகையில், ரசாயன மருந்துகள் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் ஒரு தீர்வை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த டிரோனை வடிவமைத்த டார்ன்யோல் நிறுவன ஆராய்ச்சியாளர்களின் கனவு.
ஆனால், இந்த டிரோன் நாளைக்கே நம் வீட்டு வாசலில் வந்து பறக்கப் போகிறது என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். தற்போது இது சோதனை கட்டத்தில்தான் உள்ளது. நீண்ட நேரம் பறக்கும் திறன், குறைந்த செலவில் தயாரிப்பு, பாதுகாப்பு விதிமுறைகள் போன்ற பல சவால்களைத் தாண்டிய பிறகே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்த மைக்ரோ டிரோனை கொண்டுவர முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்த ஏஐ மைக்ரோ டிரோனை பயன்படுத்துவதன் மூலம் கொசு ஒழிப்புக்கான செலவு நூறு மடங்கு குறையும் என்றும், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 10 டிரோன்கள் போதும் என்றும் டார்ன்யோல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது அந்நிறுவனத்தின் கணிப்பு தானே தவிர, நடைமுறை யதார்த்தம் அல்ல.
கொசுக்களை ஒழிக்க கொசுவர்த்தி சுருள், Liquid என பயன்படுத்திய காலம் போய், தற்போது ஏஐ மைக்ரோ டிரோனில் வந்து நிற்கிறது உலகம்…
















