பாகிஸ்தான் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், இந்தியாவின் ஆயுதப் படைகள் அந்த நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
டெல்லி பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற ‘ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பயங்கரவாதத்தைப் பரப்புவோர் பின்னடைவைச் சந்தித்து வருவதாக குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால், இந்தியாவின் ஆயுதப் படைகள் அவர்களின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் என்றும் எச்சரித்தார். ஜம்மு-காஷ்மீர் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை அமைதி நிலவுவதாகவும், மாவோயிசமும், நக்சலிசமும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார்.
2014 வரை, இந்திய ரயில் இருப்புப் பாதைகளில் 30 சதவீதத்திற்கும் குறைவாகவே மின்மயமாக்கப்பட்டு இருந்ததாகவும், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 12 ஆண்டுகளில் இருப்பு பாதை மின்மயமாக்கல் 100 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியா சார்பில் விரைவில் விண்வெளி ஆய்வு மையம் நிறுவப்படும் என உறுதியளித்த பிரதமர் மோடி, மேற்காசிய போர்ச் சூழலுக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் பயணிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
















