வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு அசன் மவுலானா வெற்றி பெற்றார்.
அப்போது, 17 லட்சம் ரூபாய் செலவு செய்ததாக அசன் மவுலானா கணக்கு தாக்கல் செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால், 32 லட்சம் ரூபாயை குறைத்து காட்டியுள்ளதாகவும், மொத்த தேர்தல் செலவுக் கணக்கு 49 லட்சம் ரூபாய் வருவதாகவும் கூறியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட 30 லட்சம் ரூபாய் என்ற உச்சவரம்பை மீறக்கூடிய வகையில் இது அமைந்திருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் திட்டமிடப்பட்ட விசாரணைகளுக்கு, அசன் மவுலானா ஆஜராகி விளக்கம் தெரிவிக்கவில்லை என்றும்,
தேர்தல் செலவுகளுக்கான உண்மையான மற்றும் சரியான கணக்கை தாக்கல் செய்ய அசன் மவுலானா தவறியுள்ளார் என்றும் கூறியுள்ளது.
30 லட்சம் ரூபாயை தேர்தல் செலவு கணக்கில் இருந்து மறைத்திருப்பதால், மக்கள் பிரநிதித்துவச் சட்டத்தின் படி விதிமுறைகளை மீறியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ள தேர்தல் ஆணையம் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என அறிவித்துள்ளது.
















